Saturday, February 27, 2010

ஷியாயிஸம்

அகில உலக அளவிலும் இஸ்லாத்தின் மிகப் பெரிய கொள்கை மாறுபாடாகக் கருதப்படுவது 'ஷியாயிஸம்' என்பதுதான். முஸ்லிம்களின் அரசியல் மற்றும் வளர்ச்சி ரீதியாக அன்றுமுதல் இன்றுவரை இடற்பாடுகளை நாம் சந்திப்பதற்கு ஷியாயிஸம் முக்கியப்பங்கு வகிப்பது நாம் மனதில் நிறுத்த வேண்டிய ஒன்று,
இஸ்லாத்தின் புரிந்துணர்வில் பல மாறுபாடுகளை கண்ட ஷியாக்கள் இந்த உம்மத்தின் ஒரு பகுதியினர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனாலும் அவர்களின் கொள்கை புரிந்துணர்வு எடுத்துக் காட்டப்பட வேண்டும், பிறரை எச்சரிக்கைப் படுத்த வேண்டும். இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆஃப்கான் போன்ற நாடுகளில் ஷியாக் கொள்கையின் தாக்கம் (இதுதான் ஷியாக் கொள்கை என்று அந்த மக்கள் அறியாமலே) பரவலாக ஆட்கொண்டுள்ளதை அவர்கள் இஸ்லாத்தை வெளிபடுத்தும் போது தெரிந்துக் கொள்ளலாம். தர்கா வழிபாடு, முஹர்ரம் மாதத்தில் நடக்கும் பல்வேறு (பூ மிதித்தல் என்ற பெயரில் நடக்கும் நெருப்பு மிதித்தல் உட்பட) தன்னை வறுத்திக் கொள்ளும் நிகழ்ச்சிகள் அனைத்தும் ஷியாக் கொள்கையேயாகும்.
எனவே அதுபற்றி ஓரளவு தமிழ் முஸ்லிம்களுக்கு நினைவுபடுத்தவே இந்தக் கட்டுரை.
ஷியா என்பது ஒரு அரபுப் பதமாகும். இலக்கண அடிப்படையில் இதற்கு 'பிரிவு' என்று பொருள். குர்ஆனில் பரவலாக இந்தப்பதம் பிரிவினர் (குரூப்) வழிதோன்றல் போன்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. மூன்றாவது ஜனாதிபதியான உஸ்மான்(ரலி) அவர்களின் படுகொலைக்குப் பிறகு ஏற்பட்ட படுமோசமான அரசியல் நெருக்கடிகள் முஸ்லிம் சமூகத்தை வெகுவாக பாதித்தது. ஆதரவு - எதிர்ப்பு என்ற கோஷங்கள் எழுந்த போது அலி(ரலி) அவர்களுக்கு ஆதரவாக ஒரு கூட்டம் (பிரிவு) களமிறங்கியது. அன்றைக்கு இவர்களை கூட்டிக் காட்ட 'ஷியதுஅலி' அலியின் ஆதரவாளர்கள் (அலி பிரிவினர்) என்ற பதம் பயன்படுத்தப்பட்டது. அடுத்தடுத்து நடந்தேறிய பல்வேறு நிகழ்வுகளுக்குப் பின்னால் 'ஷியது அலி'யில் இருந்த அலி என்ற வார்த்தை நீக்கப்பட்டு 'ஷியா'வாக சுருங்கியது. அதுவே அவர்களை சுட்டிக் காட்டும் பெயராகவும் நிலைத்து விட்டது.
பொதுவாகவே அரசியல் கொந்தளிப்பு - நெறுக்கடி ஏற்படும் போது பொய்கள் சர்வசாதாரணமாக பிறப்பெடுத்து சமூகத்தை மொத்தமாக ஆட்கொள்ளும் என்பது நாம் அனுபவ ரீதியாக அறிந்த ஒன்றுதான். இதே நிலை அன்றைக்கும் நீடித்தது. அலியின் ஆதரவாளர்கள் என்று களமிறங்கியவர்கள் தங்களையும் தங்கள் தரப்பையும் நியாயப்படுத்திக் கொள்ள பொய்களை துணிந்து பரப்பினர். (அவர்களின் இந்த நிலைப்பாட்டிற்கும் அலி(ரலி) அவர்களுக்கும் எந்த சம்பதமும் இல்லை என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்) அன்றைக்கு இஸ்லாம் என்ற கொள்கையே மிகப் பெரும் ஆதிக்கம் செய்துக் கொண்டிருந்ததால் கொள்கைத்தனமான பொய்களே மக்களை வெகுவாக கவரும் என்பதை உணர்ந்தவர்கள் அதையே கடைபிடித்தனர். தாம் எதிர்பார்க்கும் அரசியல் மாற்றங்களுக்காக இவர்கள் இத்தகைய பொய்களை பரப்பினாலும் அந்தப் பொய்கள் பலகாலகட்டங்களை கடந்தும் ஒரு பிரிவினரை தன் ஆதிக்கத்தில் வைத்துக் கொண்டிருக்கின்றன.
எனவே ஷியா என்பது 'ஷியதுஅலி' (அலி குரூப்) என்று துவங்கி அரசியலுக்காக பொய்களை புனைந்து பின்னர் 'ஷியா' என்றாகி அந்த பொய்களின் மீதே நிலைத்து விட்டவர்கள் என்பதை நாம் மறந்து விடக் கூடாது.
அவர்களின் அரசியல் ரீதியான பொய்கள் கொள்கை ரீதியாக எப்படியெல்லாம் வியாபித்தது என்பதில் சிலவற்றை வரலாற்றுப் பக்கங்களிலிருந்து உங்கள் பார்வைக்கு வைக்கிறோம்.
நபி(ஸல்) அவர்கள் மீது பொய்களை துணிந்து சொல்வதில் அரசியல் பிரிவுகள் முன்னணியில் நின்றன. இப்பிரிவினரில் ஷியாக்கள் அதிகமாக பொய்களை பரப்பியவர்களாவர். இவர்களில் மிக மோசமானவர்கள் அவர்களில் ஒரு பிரிவான ''ராபிழா'' என்ற பிரிவைச் சார்ந்தவர்கள் தான்."ராபிழாக்களைப் பற்றி என்ன சொல்கிறீர்கள்" என மாலிக்(ரஹ்) அவர்களிடம் கேட்கப்பட்டபோது,"அவர்களிடம் பேசாதீர்கள், அவர்களிடமிருந்து கிடைக்கும் எந்தச் செய்தியையும் அறிவிக்காதீர்கள், அவர்கள் பொய்யர்கள்" என்று கூறினார்கள. (மின்ஹாஜுஸ்ஸுன்னத்)"நாங்கள் ஒன்று கூடும்போது எதையாவது ஒரு செயலை நல்லது என நாங்கள் நினைத்தால் உடனே அதை ஹதீஸ் என்று கூறிவிடுவோம்" என்று 'ராபிழா' பிரிவினர் ஷைகுகளில் ஒருவர் கூறியதாக பிரபல ஹதீஸ் கலை மேதை 'ஹம்மது பின் ஸலமா'(ரஹ்) அவர்கள் கூறினார்கள், (மின்ஹாஜுஸ்ஸுன்னத்)"தாங்கள் மனோ இச்சைகளைப் பின்பற்றி கூட்டங்களில் 'ராபிழா' பிரிவினரைவிட அதிகமாக பொய் சொல்லக்கூடிய எந்த கூட்டத்தையும் நான் பார்க்கவில்லை" என இமாம் ஷாஃபி(ரஹ்) கூறியுள்ளார்கள். (உலூமுல்ஹதீஸ்: இப்னுகஸீர்)தங்கள் மனோ இச்சைக்குத் தக்கவாறு பல ஹதீஸ்களை ராபிழாக்கள் உருவாக்கிக் கூறியுள்ளனர். அவைகளில் பின்வரக்கூடிய செய்திகள் குறிப்பிடத் தக்கவையாகும்.நபி(ஸல்) அவர்கள் இறுதி ஹஜ்ஜிலிருந்து திரும்பி வரும்போது "கதீர்ஃகம்" என்ற இடத்தில் சஹாபாக்களை ஒன்றுசேர்த்து, எல்லா நபித்தோழர்களையும் பார்க்கும்படி அலி(ரலி) அவர்களின் கையை பிடிக்து "இவர் தான் என்னால் வசிய்யத்துச் செய்யப்பட்டவர், எனது சகோதரர், எனக்குப் பின்னால் கலீபாவாக வர வேண்டியவர், எனவே இவர் சொல்வதை கேளுங்கள், அவருக்கு வழிபடுங்கள், என்று நபி(ஸல்) அவர்கள் சொன்னதாக அவர்கள் மீது ஒரு பெரும் பொய்யைக் கூறியுள்ளனர்."யாரும் ஆதம்(அலை) அவர்களுடைய அறிவையும், நூஹ்(அலை) அவர்களுடைய தக்வாவையும், இப்ராஹீம்(அலை) அவர்களுடைய பொறுமையையும், மூஸா(அலை) அவர்களுடைய கம்பீரத்தோற்றத்தையும், ஈஸா(அலை) அவர்களுடைய வணக்கத்தையும் பார்க்க விரும்பினால், அவர்கள் அலி(ரலி) அவர்களைப் பார்த்துக் கொள்ளட்டும். என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டி கூறியுள்ளனர். (தன்ஷிஹுஷ்ஷரீயத்)''நான் அறிவின் தராசு, அலி அதன் இருதட்டுகள். ஹஸன், ஹுஸைன் இவ்விருவரும் அத்தராசின் கயிறாக இருக்கிறார்கள். ஃபாத்திமா அத்தராசின் தொடர், எங்களிலிருந்து வரும் இமாம்கள் அத்தராசின் தூண்கள், அத்தராசில் தான் எங்களை நேசிப்பவர்களுடையவும், எங்களை வெறுப்பவர்களுடையவும் செயல்கள் எடைப் போடப்படுகின்றன. அலி (ரலி) யை நேசிப்பது நற்செயலாகும், அந்நேசத்தோடு எத்தனை பாவங்கள் செய்தாலும் அவன் தண்டிக்கப்பட மாட்டான், அவர்களை வெறுப்பது பாவமாகும். அவ்வெறுப்போடு செய்யப்படும் எந்த நற்செயல்களும் பயனளிப்பதில்லை'' என நபி(ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டியுள்ளனர். (தன்ஷிஹுஷ்ஷரீயத்)''நான் கல்வியின் பட்டணம், அலி அதன் வாயில்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக பொய்யாகப் புனைந்து கூறியுள்ளனர். (தன்ஷிஹுஷ்ஷரீயத்)
இவ்வாறு அலி(ரலி) அவர்களைப் பற்றியம், அவர்களின் குடும்பத்தார்களைப் பற்றியும் புகழ்ந்து பல ஹதீஸ்களை ஷியாக்கள் இட்டுக்கட்டிக் கூறியுள்ளனர்.இப்படிப்பட்ட ஹதீஸ்கள் மூன்று லட்சத்தை எட்டும் என 'கலீலி' என்பவர் தனது ''அல்இர்ஷாத்'' என்ற நூலில் குறிப்பிடுகிறார்.ஹதீஸ்களை இட்டுக்கட்டிக் கூறுவதில் ஈடுபட்டிருந்த ''அபுல் அவ்ஜாயி'' என்பவரைப் பிடித்துக் கொண்டு வந்து அவருடைய தலையை வெட்டுமாறு 'பாஸரா' என்ற ஊரில் அமீராக இருந்த அலி(ரலி) அவர்களின் பேரரான முஹம்மது என்பவர் கட்டளையிட்டார். அந்நேரத்தில் ''நான்காயிரம் ஹதீஸ்களை நான் இட்டுக்கட்டி உங்களுக்குக் கூறியுள்ளேன், அவற்றில் ஹலாலை ஹராமாகவும், ஹராமை ஹலாலாகவும் ஆக்கிக் கூறினேன்'' என்று ''அபுல் அவ்ஜாயி'' கூறினார். (தன்ஷிஹுஷ்ஷரீயத்)ஷியாக்கள் தங்கள் தலைவர்களைப் புகழ்வதோடு நின்றுவிடாமல் அபூபக்கர், உமர், உதுமான் (ரலி - அன்ஹும்) போன்ற பெரும் நபித்தோழர்களை இகழ்ந்து பல ஹதீஸ்களை உருவாக்கிக் கூறியுள்ளனர்.இதை அறிந்த சுன்னத் ஜமாத்தில் உள்ள சில அறிவிலிகள் ஷியாக்களை எதிர்க்க வேண்டுமென்பதற்காக சில ஸஹாபாக்களைப் புகழ்ந்து இட்டுக்கட்டி சில ஹதீஸ்களைக் கூற ஆரம்பித்தார்கள். பொய்யை, பொய்யைக் கொண்டே எதிர்க்கும் மோசமான பழக்கத்தைக் கடைப்பிடித்தார்கள்.''சுவர்க்கத்தின் மரத்திலுள்ள ஒவ்வொரு இலையிலும் லாயிலாஹ இல்லல்லாஹ், முஹம்மதுர்ரஸூலுல்லாஹ் என்றும் அபூபக்கர், உமர், உதுமான் என்றும் எழுதப்பட்டிருக்கும்'' என்று ஒரு ஹதீஸைப் புனைந்து கூறினார்கள். (தன்ஸீஹ்)இவ்வாறே முஆவியா (ரலி) அவர்களது அணியைச் சார்ந்தவர்கள் தங்கள் அணிக்குச் சாதமாகப் பல ஹதீஸ்களை உண்டாக்கிக் கூறலானார்கள். சத்தியத்தைச் சொல்பவர்களும், அசத்தியத்தைப் பரப்புபவர்களும் தங்கள் கொள்கைகளை வலுப்படுத்துவதற்காக தாங்களாகவே ஹதீஸ்களை உற்பத்தி செய்து கொண்டார்கள்.
ஷியாயிஸம் என்பது இஸ்லாத்தின் அடிப்படைகளுக்கு முற்றிலும் மாறுபட்ட ஒரு கொள்கையாகும். இன்னும் சொல்லப்போனால் அது ஒரு தனி மதம் என்று கூட சொல்லலாம்.நபி (ஸல்) அவர்களை விட அலீ (ரலி) அவர்களை உயர்வானவர்களாகச் சித்தரிப்பவர்கள் ஷியாக்கள். மேலும் அபூபக்ர், உமர், உஸ்மான் போன்ற கலீஃபாக்களும் நபித்தோழர்களும் காஃபிர்கள் என்பது ஷியாக்களின் நம்பிக்கை. ஷியாக் கொள்கை இஸ்லாத்தின் அடிப்படைக்கு மாற்றமானது என்பதைப் புரிந்து கொள்வதற்கு ஷியாக்கள் புனிதமாகப் போற்றும் நூல்களிலிருந்து சிலவற்றை இங்கு தருகின்றோம்.''தொழுகைகளைப் பேணிக் கொள்ளுங்கள்! நடுத்தொழுகையையும் பேணிக் கொள்ளுங்கள்'' என்பது திருக்குர்ஆன் வசனம். இதற்கு விளக்கம் கூறப் புகுந்த ஷியாக்களின் விரிவுரையாளர்கள் அய்யாஷ், ஹுவைஸீ ஆகிய இருவரும் பின்வருமாறு கூறுகின்றார்கள்.(ஐந்து) தொழுகைகள் என்பது ரசூல் (ஸல்), அலீ (ரலி), ஃபாத்திமா (ரலி), ஹஸன் (ரலி), ஹுஸைன் (ரலி) ஆகிய ஐவராவர். நடுத் தொழுகை என்று விஷேசமாகக் குறிப்பிட்டது அலீ (ரலி) ஆவார். அய்யாஷி தப்ஸீர் பாகம் 1, பக்கம் 128, நூருஸ்ஸகைன் பாகம் 1, பக்கம் 238 ஷியாக்களின் மற்றொரு தப்ஸீரில், நபி (ஸல்) அவர்கள் ருகூவு, ஸஜ்தா செய்ய நான் பார்த்திருக்கிறேன். அப்போது அவர்கள், இறைவா! உன் அடியார் அலீயின் பொருட்டால் அவர்களின் கண்ணியத்தினால் என் உம்மத்தின் பாவிகளை மன்னிப்பாயாக! என்று துஆ செய்தார்கள் என இப்னு மஸ்ஊது (ரலி) கூறினார்கள். அல் புர்ஹான் ஃபீ தப்ஸீரில் குர்ஆன் பாகம் 4, பக்கம் 226 ''நான் மூஸா (அலை), கிழ்ரு (அலை) ஆகியோர் முன்னிலையில் இருந்திருந்தால் அவ்விருவரை விட நான் மிகவும் அறிந்தவன் என்று பிரகடனம் செய்திருப்பேன்'' என்று அலீ (ரலி) கூறினார்களாம். ஷியாக்களில் புகாரி இமாமைப் போல் மதிக்கப் படும் குலைனீ என்பவர் தமது நூலில் இவ்வாறு கூறுகின்றார். அல் உஸுலுல் காபி கிதாபுல் ஹுஜ்ஜத் பாகம் 1, பக்கம் 261 ''உம்மைக் கொண்டே இறைவன் ஆதமை மன்னித்தான். உம்மைக் கொண்டே யூசுப் நபியை பாழுங்கிணற்றிலிருந்து காப்பாற்றினான். உம்மைக் கொண்டே அய்யூப் நபியைச் சோதித்தான்'' என்று அலீ (ரலி) அவர்களை நோக்கி ஸல்மான் பார்ஸீ (ரலி) கூறினார்கள். அல் புர்ஹான் முன்னுரை பக்கம் 27 நபி (ஸல்) அவர்கள் மிஃராஜுக்குச் சென்று இறைவனை நெருங்கிய போது ''முஹம்மதே! திரும்பிப் பாரும்'' என்றானாம் இறைவன். திரும்பிப் பார்த்தால் அங்கே அலீ (ரலி) நிற்கின்றார்கள். தஃப்ஸீருல் புர்ஹான் பாகம் 2, பக்கம் 404
எனக்கு முன் நபிமார்கள் உட்பட எவருக்கும் கொடுக்கப் படாத சிறப்புக்கள் எனக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. நடந்தது எனக்குத் தெரியாமல் நடந்திராது, நடப்பவை என்னை விட்டும் மறையாது என்று அலீ (ரலி) கூறினார்கள். அல்உஸுலு மினல் காபி பாகம் 19, பக்கம் 197 அலீ (ரலி) அவர்கள் திரும்பவும் இவ்வுலகுக்கு வருவார்கள் என்பது நமது கொள்கையாகும். இதை நம்பாதவன் நம்மைச் சேர்ந்தவனல்லன் என்று பாகிர் இமாம் கூறினார்கள். காஷானியின் கிதாபுஸ்ஸாயி பாகம் 1 பக்கம் 837
நபி (ஸல்) அவர்களை விட அலீ (ரலி) உயர்ந்தவர்கள் என்பது இவர்களின் கொள்கை என்பதற்கு இவை சான்றுகளாகத் திகழ்கின்றன.நபி (ஸல்) அவர்களுக்குப் பின் நான்கு நபர்களைத் தவிர எல்லா நபித்தோழர்களும் மதம் மாறி விட்டனர் என்று ஷியாக்களின் கொள்கை பரப்புச் செயலாளர் ஸலிம் இப்னு கைஸ் அல் ஆமிரீ தனது நூலில் பக்கம் 92ல் கூறுகிறார்.மிக்தாத் இப்னுல் அஸ்வத், அபூதர் அல்கிபாரி, ஸல்மான் பாரிஸீ ஆகிய மூவரைத் தவிர எல்லா நபித்தோழர்களும் காபிர்களாகி விட்டனர். கிதாபுர்ரவ்லா மினல் காபி பாகம் 8, பக்கம் 245 அபூபக்ரும், உமரும், அலீ (ரலி) அவர்களுக்குச் செய்த தீங்குக்கு மன்னிப்பு கேட்காமலேயே மரணித்தனர். அவ்விருவர் மீதும் அல்லாஹ்வின் சாபமும், மலக்குகளின் சாபமும், எல்லா மக்களின் சாபமும் உண்டாகட்டும். கிதாபுர்ரவ்லா மினல் காபி பாகம் 2 பக்கம் 246 (அபூபக்ருக்கு பைஅத் செய்ததன் மூலம்) அனைவரும் அறியாமைக் காலத்துக்குத் திரும்பினார்கள். அன்ஸார்கள் மட்டும் அபூபக்ருக்கு பைஅத் செய்யாமல் ஸஃதுக்கு பைஅத் செய்ததன் மூலம் அந்த அறியாமையிலிருந்து விலகினாலும் மற்றோர் அறியாமையில் அவர்கள் வீழ்ந்தனர். கிதாபுர்ரவ்லா மினல் காபி பாகம் 2 பக்கம் 296 எல்லோரும் பல்வேறு உலக நோக்கம் கருதியே இஸ்லாத்தில் இணைந்தனர். அலீ என்ற ஒரு நபரைத் தவிர, அவர் மட்டுமே உணர்ந்து இஸ்லாத்தை ஏற்றார். கிதாபுஷ்ஷியா வஸ்ஸுன்னா என்ற சின்ன ஏடு அல்லாஹ்வும், அவனது தூதர் (ஸல்) அவர்களும் புகழ்ந்துரைத்த நபித்தோழர்களைப் பற்றி தரக்குறைவாகவும், காஃபிர்கள் என்றும் திட்டுவது ஷியாக்களின் கொள்கை என்பதை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம்.இவை தவிர ஷியாக்களின் இமாம்கள் எனப்படும் 12 பேரைப் பற்றிய இவர்களின் நம்பிக்கையும் ஷியாக்கள் இஸ்லாத்திற்குத் துளியும் சம்பந்தமில்லாத கொள்கையுடவர்கள் என்பதை நிரூபிக்கின்றன.ஷியாக்களின் பன்னிரெண்டு இமாம்களும் தாங்கள் எப்போது மரணிப்போம் என்பதை அறிவார்கள். அவர்கள் விரும்பிய நேரத்தில் மரணிப்பார்கள். அல் உஸுலு மினல் காபி பக்கம் 258 இந்தப் பனிரெண்டு இமாம்களிடமும் மலக்குகள் வந்து எல்லா விபரங்களையும் கூறிச் செல்வார்கள். அல் உஸுலுமினல் காபி பக்கம் 398 இந்தப் பனிரெண்டு இமாம்களிடமும் விஷேசமான ஞானம் உள்ளதாம், அதை மலக்குகளும் நபியும் கூட அறிய முடியாது. அல் உஸுலுமினல் காபி பக்கம் 402 எந்த மனிதனின் பேச்சாயினும், பறவைகள் மிருகங்கள் மற்றும் உயிரினங்களின் பேச்சாயினும் அனைத்தையும் பனிரெண்டு இமாம்களும் அறிவர். குர்புல் இஸ்ஸாத் பக்கம் 146
பன்னிரு இமாம்களில் ஒருவராகிய ஜஃபர் சாதிக் அவர்கள் (பூரியான் பாத்தியா நாயகர்) ''வானம் பூமியில் உள்ள அனைத்தையும் நான் அறிவேன், நடந்ததையும் நடக்கவிருப்பதையும் நான் அறிவேன்'' என்றார்கள். அல்உஸுலு மினல் காபி, பாகம் 1, பக்கம் 261 இறந்தவர்களை உங்களால் உயிர்ப்பிக்க இயலுமா? குஷ்ட ரோகிகளையும், பிறவிக் குருடரையும் உங்களால் குணப்படுத்த முடியுமா? என்று அபூஜஃபர் அவர்களிடம் கேட்ட போது முடியுமே என்றார்கள். கிதாபுல் ஹுஜ்ஜா மினல் காபி, பாகம் 1, பக்கம் 470 ''யார் அலீயை அறிந்து கொள்கிறாரோ அவரை நான் நரகில் புகுத்த மாட்டேன். அவர் எனக்கு மாறு செய்திருப்பினும் சரியே, எனக்குக் கட்டுப்பட்டு நடந்தாலும் அலீயை அறியாதவர்களை நான் சுவர்க்கத்தில் சேர்க்க மாட்டேன்'' என்று அல்லாஹ் அலீ (ரலி) யைப் பற்றி கூறினானாம். பஹ்ரானியின் புர்ஹான் எனும் தப்ஸீர் முன்னுரை பக்கம் 23
அல்லாஹ்வின் பெயராலேயே இப்படிப் பொய் கூறுபவர்களே ஷியாக்கள். அல்லாஹ்வின் பெயராலும் அவனது தூதர் (ஸல்) அவர்களின் பெயராலும் இது போல் அவர்கள் அரங்கேற்றிய பொய்கள் ஏராளம். இவர்களது வெறி எந்த அளவுக்குச் சென்று விட்டதென்றால் ''வரவேண்டியவர்'' என்றொரு கற்பனைப் பாத்திரத்தை இவர்கள் உருவாக்கியுள்ளனர். அல் காயிம் என்று இவர்களால் குறிப்பிடப்படக் கூடிய ஒருவர் வருவாராம், அவர் செய்யும் காரியங்கள் என்ன தெரியுமா?காயிம் வந்து ஹுஸைனைக் கொலை செய்தவர்களின் சந்ததிகளை அவர்கள் முன்னோர் செயலுக்காக கொன்று குவிப்பார். தப்ஸீர் சாபி பாகம்1, பக்கம் 172
காயிம் வந்து ஆயிஷாவைத் திரும்ப எழுப்பி அவர்களைச் சவுக்கால் அடிப்பார். பாத்திமாவின் தாயார் மீது அவதூறு கூறியதற்காக இவ்வாறு நடவடிக்கை எடுப்பார். தப்ஸீர் ஸாபி பாகம் 2, பக்கம் 108
இத்தகைய கொள்கைக்காரர்களே ஷியாக்கள். ஷியாக்களைப் பற்றி எழுத வேண்டும் என்றால் இப்படி நிறைய எழுதலாம். அவர்களையும் அவர்களின் கொள்கைகளையும் புரிந்துக் கொள்ளும் சில உதாரணங்களே இவை. பிறிதொரு சந்தர்பத்தில் விரிவாக விளக்குவோம். இன்ஷா அல்லாஹ்.
நன்றி: இது தான் இஸ்லாம்.காம்
தமிழ் இஸ்லாமிய செய்தி ஊடகத்தின் உலக வலை

No comments:

Post a Comment